Published: MAR 29, 2024

"200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வித்திட்டத்தில் இடம்!" - டாக்டர் பாரிவேந்தர் உறுதி

முத்தரையர் சமூகத்தை சேர்ந்த 200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வித் திட்டத்தில் இடம் ஒதுக்கப்படும் எனவும், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரூர் மாவட்டம் குளித்தலை சுங்கவாயில் அருகே தமிழர் தேசம் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவரான கே.கே.செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்த அந்த பொதுக்கூட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பெரம்பலூர் மக்களவைத் தொகுதி IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், கட்சியை வலுப்படுத்தவும், அடையாளம் காணச்செய்யவும் தேர்தல் நேரத்தில் சரியான முடிவை தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவரான கே.கே.செல்வகுமார் எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம் எனக் குறிப்பிட்ட பாரிவேந்தர், தமிழ்நாட்டில் முத்தரையர்கள் பெரிய அளவில் இருந்து கொண்டு, அரசியல் அடையாளம் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கொடி பிடித்துக்கொண்டு, சேவகம் செய்த நிலை மாறவேண்டும் என்று பேசினார். ''அதற்காக சரியான நேரத்தில் தமிழர் தேசம் கட்சியை தலைவர் கே.கே.செல்வக்குமார் ஆரம்பித்திருக்கிறார்.

நாட்டை பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருவதால், உலக நாடுகள் இந்தியாவைப் பெருமையோடு பார்க்கின்றன'' என புகழாரம் சூட்டினார். ''தேர்தலில் வெற்றிபெற்றவுடன், தமிழர் தேசம் கட்சி சார்பில் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்'' என வாக்குறுதி அளித்தார். தனது சொந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து கடந்தமுறை ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வியை வழங்கியதாக சுட்டிக்காட்டிய டாக்டர் பாரிவேந்தர், அதில் படித்த மாணவர்கள் பொறியாளர்களாக, வணிக மேலாண்மை, வேளாண் பொறியியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் படித்து பட்டம் பெற்று முன்னேறி இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

இந்த முறையும் இலவச உயர்கல்வித் திட்டம் தொடரும் எனத் தெரிவித்த டாக்டர் பாரிவேந்தர், அதில் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த 200 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கலச் சிலை அமைத்துக் கொடுப்பேன் எனவும் டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.

BACK TO HOME

© vikatan 2024. All Rights Reserved